Saturday, August 25, 2018

கமுகு (பாக்கு மரம்)


பூஞ்சோலைகளில் பாக்குமரத்தில் ஊஞ்சல் கட்டப்படுவது மரபு

1099.பூக ஊசல் புரிபவர்போல். ஒரு
பாகின் மென்மொழி. தன் மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தர. சேவகன் தேரின்பின்.
ஏகும். மீளும்; இது என் செய்தவாறுஅரோ?
 
ஒரு   பாகு   இன்மொழி-  (கருப்பஞ்  சாற்றின்)  பாகு போன்ற
இனிக்கும்  மொழி  பேசுவாள்  ஒருத்தி; பூக ஊசல் புரிபவர் போல்-
பாக்கு மரங்களுக்கிடையே கட்டப்பட்ட ஊஞ்சலில்  விரும்பி ஆடுபவர்
போன்று
;தன் மலர்ப் பாதங்கள்  சேகு  சேர்தரச் சேவகன்  தேரின்பின்
ஏகும்;  மீளும்  -  தன்னுடைய  செந்தாமரைப்   பூப்போன்ற  சிவந்த
பாதங்கள்  மேலும்  சிவந்து  போகும்படி  உயர்  வீரனான இராமனின்
தேர்  ஏகுகையில்  பின்னால்  செல்வாள். நாணத்தால்  மீள்வாள்; இது
என்  செய்த  வாறு? 
- (தொடர்ந்து ஏகவும் மீளவும் இருக்கும் இவள்)
என்ன கருதி இவ்வாறு செய்கிறாள்?
அரோ     - அசை. ஒன்று. போக வேண்டும்;அல்லது  திரும்பிவிட
வேண்டும்.  இரண்டில்  ஒன்று செய்யாமல் இரண்டும்   செய்கிற  இவள்
உகந்தது  என்  என  வியந்தார்.  மையல் கொண்டார்  ஊசல்  ஆடும்
உளத்தினராய்த்   தவிப்பவர்   எனச்  சுட்டியவாறு  “கமுகு    பூண்ட
ஊசலில்.
 மகளிர்  மைந்தர் சிந்தையோடு  உலவக் கண்டார்” (கம்.488)
எனவும் “ஊசல் ஆடி  வளையும்  உளத்தினான்” (கம்ப. 5167)  எனவும்
தடுமாறு நிலைக்கு ஊசலை உவமிப்பார்.                        37 

Tuesday, August 14, 2018

அகில் மரம் (Agarwood- aquilaria agallocha)

பெரிய மரம். அக்விலேரியா அகல்லோச்சா இனத்தைச் சார்ந்தது. தைமீலியேசீ குடும்பத்தைச் சேர்ந்தது. 60-70 உயரமும், 5-8 ஆதி சுற்றளவுமுள்ளது.இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் முக்கியமாக அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, நாகா மலைக்காடுகளில் வளர்கிறது. பர்மாவிலும் உண்டு.

பயன்கள்


பட்டையிலுள்ள நார் காகிதம் செய்யவும், கயிறு திரிக்கவும் உதவுகிறது. பிசின்
வடிவதில்லை. சற்று முதிர்ந்த மரத்தில் சில இடங்கள் கறுப்பாயிருக்கும். அதில் ஒருவித எண்ணெய்ப் பிசின் உள்ளது. வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. இதிலிருந்து உருவாகும் தைலத்திற்கு அகர் அத்தர் என்று பெயர். தைலம் வாசனைப் பொருளாகவும், வாசனைப் பொருள்களைக் கலப்பதற்கும் பயன்படுகிறது. துணிகளில் தூவி வைப்பதால் பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஊதுபத்தி, அகர்பத்தி (Agarbatti)
செய்யவும் பயன்படுகிறது


அமைப்பு

.மரம் நோயுற்றது போல இருக்கும். பிசின் கிளைகள் கலக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும். ஒரு விதக் காளான் மரத்தில் பற்றிக்கொண்டு வளர்வதுதான் அகில் உண்டாவதற்குக் காரணமாகும். நல்ல மரங்களில் காளான் பற்றியிருக்கும். அகில் தரும் மரங்களில் சில இனங்களுண்டு. இந்தியாவிலுள்ள முக்கியமான மரம் அக்விலேரியா அகல்லோச்சா இனமாகும்.
  
ஏற்றுமதி
 பெரும்பாலும் அஸ்ஸாமிலிருந்து பல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. மிகப் பழைய காலந்தொட்டு தமிழ்மக்கள் அகிற் கூட்டுக்களில் பெரு விருப்பம் உடையவர்கள்.







 




1041.நறு விரைத் தேனும். நானமும். நறுங் குங்குமச்
செறி அகில் தேய்வையும். மான்மதத்து எக்கரும்.
வெறியுடைக் கலவையும். விரவு செஞ் சாந்தமும்.
செறி மதத் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம்.
 
நறுவிரைத் தேனும் நானமும்- நறுமணமுடைய தேனும்.  (கூந்தலில்
கலந்தொழுகும்)  புனுகும்;  நறுங்குங்குமச் செறிஅகில் தேய்வையும்-
நல்ல   வாசனையுடைய   குங்குமப்   பூவோடு   சேர்ந்த   திண்ணிய
அகிற்கட்டைத் தேய்வினால் ஆகிய குழம்பும்; மானமதத்து எக்கரும் -
மான்மதமாகிய  கத்தூரியின்  மிகுதியும்;  வெறியுடைக்  கலவையும் -
பரிமளமுடைய  பல்வேறு  வாசனைப்   பொருள்களின்   சேர்க்கையும்;
செஞ்சாந்தமும் 
- செந்நிறச் சந்தனமும்; விரவு செறி மதக் கலுழியாய்
சேறுமே    
-   சேர்தலால்   உண்டான    சேறுகளுடனே.   மிகுந்த
யானைகளின்  திரள்களில்  உண்டான  மதநீர்  பாய்கின்ற  சேறுகளும்;
சேறு  எலாம்  
-  (சேர்ந்த கலவையே படைசெல்லும் வழியில் உள்ள)
சேறுகள் யாவும். 
இழிகுணச் சேறின்றி. நறுமணச் சேறே வழியெங்கும் என்று கற்பித்து.
செல்வ வளமும். நாகரிகச் செழுமையும் சுட்டியவாறு. கலுழி - வெள்ளம்.

Thursday, August 9, 2018

முருக்க மலர் (கல்யாண முருங்கை... `Erythrina Indica’)

எடை குறைக்கும், கர்ப்பப்பை பிரச்னை தீர்க்கும்.

 கணக்கில்லா பலன்கள் தரும் கல்யாண முருங்கை!

கல்யாண முருங்கை... `Erythrina Indica’  என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை.

இதன் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல வேதிப்பொருள்கள் உள்ளன. வெற்றிலை, மிளகு போன்ற கொடி வகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஏதுவாக இது  வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் கொடிக்கால்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. இதன் முழுத்தாவரமும் காரச்சுவையும் வெப்பத்தன்மையும்கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும் பளிச்சிடும் சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது.
இதன் இலை, சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும்; தாய்ப்பாலை பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும். 
இதன் பூக்கள், கருப்பையைச் சுத்தமாக்கும். பட்டைகள், கோழை அகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடல்புழுக்களைக் கொல்லும். விதைகள், மலமிளக்கும். 
கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் இதை நட வேண்டும் என்பது மரபாக இருந்திருக்கிறது. அதேபோல் பெண்கள் அதிகமாக உள்ள வீடுகளில் இந்த மரத்தை நட்டு, அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னையும் இல்லாமல் இளமையுடன், அழகான பெண்ணாக உருவெடுத்து நிற்பார்கள். அவர்களுக்கு வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த முருங்கை.
இந்த மரம் பெரும்பாலும் பெண்களின் உடல்நலனுக்கு நன்மை பயக்கக்கூடியது. மாதவிடாயின்போது வரக்கூடிய வயிற்றுவலியைக் குணமாக்க, இதன் 30 மி.லி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் தொடர்ந்து குடித்துவர வேண்டும். அதேபோல் இலையிலிருந்து
ரசம் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுவலி குணமாகும்.
கறுப்பு எள் ஊறவைத்த நீர்விட்டு, இதன் இலையை அரைத்து, காலை, மாலை என சாப்பிட்டுவந்தால் தாமதித்த மாதவிடாய் சீராகும்.
கர்ப்பக் காலங்களில் இதன் இலைகளை அரிந்து, சிறு பயறுடன் சேர்த்து வேகவைத்துக் கொடுப்பார்கள். இது கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சிறுநீர் எரிச்சலைக் குணமாக்கும்; தாராளமாக சிறுநீர் வெளியேற உதவும்.
இதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை அருந்துவதால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரிகும்; உடல் இளைக்கும்.
குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு
சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க வேண்டுமென்றால், இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்துச் சாப்பிட்டுவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய், நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரக்கும்.
இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும்; தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.
குடல்புழுக்களின் தொல்லையால் சில குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் 10 சொட்டு கல்யாண முருங்கை இலைச் சாற்றை சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.  பெரியவர்கள் இதன் 4 டீஸ்பூன் இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், புழுக்கள் வெளியேறும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.
இதன் இலைச் சாற்றுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, மேல் பூச்சாகப் பூசிக் குளித்துவந்தால், சொறி, சிரங்கு சரியாகும். 60 மி.லி இலைச் சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்துவந்தால் லேசான வயிற்றுப்போக்கு உண்டாகும். அப்போது வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகல வேண்டுமென்றால், இலையுடன் அரிசி சேர்த்து அரைத்துத் தோசை செய்துசாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
இதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். இதுவும் சளியை அகற்றும் தன்மைகொண்டது.
கல்யாண முருங்கையுடன் முருங்கை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தச்சோகை சரியாகும்.



974.‘யாழ்க்கும். இன் குழற்கும். இன்பம்
   அளித்தன இவை ஆம்’ என்ன
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர்
   கிஞ்சுகம் கிடந்த வாயாள்.
தாள் கருங் குவளை தோய்ந்த
   தண் நறைச் சாடியுள். தன்
வாள்-கணின் நிழலைக் கண்டாள்;
   வண்டு என ஓச்சுகின்றாள்.
 
யாழ்க்கும் இன்குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன-   வீணையின்   இசைக்கும்.  இனிய  குழலிசைக்கும்  (இசை)  இன்பம்
கொடுத்தவை   இவள்  சொற்கள்தாம்  என்னுமாறு;  கேட்கும்  மென்
மழலைச்  சொல் ஓர் கிஞ்சுகம்  கிடந்தவாயாள்  
- (இனிதான ஒலி)
கேட்கச்  செய்கிற   மெல்லிய   மழலை மொழியினையும். முருக்க மலர்
அனைய  சிவந்த  வாயினையும்  உடையாள்   ஒருத்தி; தாள் கருங்கு
குவளை   தோய்ந்த  தண்  நறைச் சாடியுள்  
-  தண்டினையுடைய
கருங்குவளை  மலர்  இடப்  பட்டுள்ள   குளிர்ந்த   கள்ளினையுடைய
சாடியின்  உள்ளே;  தன்  வாள்க(ண்)ணின்  நிழலைக் கண்டாள்  -
தன்னுடைய  வாள்போன்ற கண்களின் நிழலைப்  பார்த்தாள்  (நிழலென
அறியாது.);  வண்டென  ஓச்சுகின்றாள்  -  (உள்ளே  உள்ள குவளை
மலர்களில்  மது  வுண்ண  வந்த வண்டுகள்  என்று)   தன்கண்நிழலை
ஓட்டலானாள்!
எல்லா   இனிமைப் பொருட்கும் இனிமைகொடுக்க வல்லவை குழலும்
யாழும்.  அவற்றுக்கும்  இனிமை  கொடுக்க  வல்லவை இவள் மழலைச்
சொற்கள் என்க. 
கட்   சாடியுள் மணத்திற்காகக் குவளை. தாமரை முதலிய மலர்களை
இட்டு  வைத்தல்  மரபு.  அந்த  மலர்களை மொய்க்க வண்டுகள் வந்து
விட்டன   என்று   கருதிச்  சாடியுள்  தெரிந்த   தன்   விழி  நிழலை
ஓட்டுகின்றாள்!   மதுப்பழக்கம்  நகைப்பிற்கு   இடம்   ஆனவற்றையே
செய்யும் என மேலும் உணர்த்தியவாறு.        

வீழிப் பழம் / விழுதி



விழுதி அல்லது விளச்சி (lycheeLitchi chinensis) என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மரமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.இம்மரப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், பூப் போன்ற நறுமணமுடையது. ஆயினும் இதன் நறுமணம் சந்தைப்படுத்தலுக்கு அடைந்து வைப்பதனால் இல்லது போகின்றது. பொதுவாக இப்பழம் உடனேயே வெறுமனே உண்ணப்படும்.



May Be Kambar Can be discribed the lychee fruit in kamabaramayanam

956.
தாழ நின்ற ததை மலர்க் கையினால்.
ஆழி மன் ஒருவன் உரைத்தான்; அது
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்.
தோழி கண்ணில். கடைக்கணிற் சொல்லினாள்.
 
ஆழி  மன்  ஒருவன் - ஆணைச் சக்கரம் செலுத்தவல்ல மன்னன்
ஒருவன்;  தாழ நின்ற  ததைமலர்க்  கையினால் - மிக நீண்டு நின்ற
இதழ்கள்   செறிந்த  தாமரை   மலர்   போன்ற  (தன்)  கைகளினால்;
உரைத்தான்  
-  (நாம்  எங்கே; எப்போது மீண்டும் சந்திப்பது  என்று)
சைகையால்  கேட்டான்; வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல் - வீழிப்
பழம்
  போன்ற  வாயினையுடைய   மெல்லியலாள்  ஒருத்தி;  தோழி
கண்ணில் கடைக் கண்ணில் சொல்லினாள்-
தோழியின் கண்மூலமாகக்
கடைக் கண் சாடையினால் (அவனுக்குப்) பதில் அறிவித்தாள். 
ஆடவனாகிய    அவனைப் போலச் சைகையால் நேரடியாகப் பதில்
இறுத்தல். உயர்  குடிப்பெண்மைக்குச்  சிறப்பு  அன்று ஆதலின். தோழி
கண்ணுக்கு  இவள்  கண்ணால்  சொல்ல.   அவள்  அவனுக்குத்   தன்
கடைக்   கண்ணால்  தெரிவித்தாள்  என்க.  காதல்   உலகில்.   நயன
மொழியின்  பெரும்பங்கு  தெரிவித்தவாறு  “சிறு  நோக்கம்  காமத்தின்
செம்பாகம்    அன்று    பெரிது”   திருக்.   1092)    “பெண்ணினால்
பெண்மையுடைத்தென்ப    கண்ணினால்  காமநோய்  சொல்லி   இரவு”
(திருக். 1280) எனும் அருமைக்  குறள்கள்  ஒப்பிடத்தக்கன.  “காதன்மை
கண்ணுளே   அடக்கிக்   கண்   எனும்.   தூதினால்  துணி  பொருள்
உணர்த்தித்  தான்.  தமர்க்கு.  ஏதின்மை  படக்  கரந்திட்ட  வாட்கண்
நோக்கு.  ஓதநீர்  அமுதமும்  உலகும் விற்குமே”  (சீவக. 1485)  எனும்
திருத்தக்க தேவர் வாக்கும் சிந்திக்கற்பாலது.

தலமர சிறப்புகள்

விழுதி - சிறுசெடி


விழுதி Cadaba indica, Lam.; Capparidaceae.

நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற 
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார் 
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய 
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே. 

                                                                                           . - திருஞானசம்பந்தர்.



திருவீழிமிழலை என்னும் தலத்தின் தலமரமாக விளங்குவது விழுதி ஆகும். வீழி என்பதும் விழுதியைக் குறிப்பதே. தலத்தின் பெயர் தலமரத்தால் பெற்றதாகும். இது தனியிலைகளையும் மங்கலான வெண்ணிற பூக்களையும் செந்நிறப் பழங்களையும் உடைய முள்ளில்லாத சிறுசெடியாகும். இதன் இலை, காய், வேர் முதலியன மருத்துவப் பயன்கொண்டவை.

வாத நோய் தீர்த்தல், வீக்கம் கரைத்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது

Sunday, August 5, 2018

புன்னை (calophyllum inophyllum)

புன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்துகட் பகுதியும் கொண்டது. புன்னை மரத்தின் அறிவியற் பெயர் calophyllum inophyllum என்பதின் முதற்பகுதி calophyllum என்பதன் பொருள் அழகான இலை. calo என்பது கிரேக்கச் சொல்லான καλός (காலோசு), என்பதில் இருந்து பெற்றது. அதன் பொருள் அழகானது, அருமையானது என்பது. phyllum (φύλλον) என்பது இலை. சிங்கள மொழியில் இது தொம்ப (දොඔ) எனவும், மலையாளத்தில் புன்னாகம் പുന്നാഗം எனவும் அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகள், மியன்மார்மலேசியாஆத்திரேலியாஇலங்கை, கிழக்காபிரிக்கக் கரையை அண்டிய தீவுகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இது ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது. இந்தியாவில் மும்பாய்க்கும் இரத்தினகிரிக்கும் இடைப்பட்ட பகுதியிலும், அந்தமான் தீவுகளிலும்பெருமளவில் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் கடற்கரையோரப்பகுதிகளில் காணலாம்.
இதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றது.

925.
நாறு பூங் குழல் நன்னுதல். புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று. ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்.
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ! 
 
நாறு     பூங்குழல்  நன்னுதல் -  மணக்கின்ற  பூக்களையணிந்த
கூந்தலையும்    அழகிய    நெற்றியையும்     உடையாள்    ஒருத்தி;
புன்னைமேல்  ஏறினான்  
-  புன்னை  மரத்தின்  மீது  (பூக்கொய்ய)
ஏறியுள்ள  தன்  கணவனுடைய;
  மனத்து உம்பர் சென்று ஏறினாள்-
மனத்தின்  மீது  ஏ?றி அமர்ந்திருந்தாள்; ஊறு ஞானத்து உயர்ந்தவர்
ஆயினும்  
-  மனத்தில்  ஊற்றாய்ச்  சுரக்கின்ற   அறிவினைப் பெற்ற
உயர்ந்தோர் ஆனாலும்; வீறுசேர்  முலை  மாதரை  வெல்வரோ? -
பெருமைமிக்க     தனங்களையுடைய    பெண்டிரை   வெல்லவல்லவர்
ஆவரோ? (ஆகார் என்க.) 
அவன்     புன்னை மேல் ஏறினான்.  இவளோ அவன் உள்ளத்தின்
மேல்  ஏறினாள்.  உருவுடைய  மரத்தின்   மேல்  ஏறலினும்  உருவற்ற
உள்ளத்தின்மேல்  ஏறல்    அன்றோ   உயர்வுக்குரியது   என்றவாறு.
வேற்றுப்பொருள்வைப்பணி.   ஞானத்தால்   உயர்ந்தாரும்   காமத்தால்
தாழ்வர்  என்பது குறிப்பு. “வஞ்சி போல் மருங்குலார்  மாட்டு  யாவரே
வணங்கலாதார்?” (896) என்று முன்பும் கூறினார்.  

தாமரை (lotus)

தாமரை (lotus), ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருந்து வகைகளிலும் தாமரை மிகவும் போற்றப்படும் இடம் பிடித்துள்ளது.

குவளை (தாவரம்)

குவளை அல்லது வெள்ளை அல்லி (Nymphaea odorata) எனப்படுவது ஓர் நீர்த்தாவரமும் நிம்பியா குடும்பத் தாவரமும் ஆகும்.


குவளை மலர் குளத்தில் பூக்கும். மலைப்பகுதி மகளிர் பறித்துக் குவித்து விளையாடியதாகச் சங்கநூல் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.
இதில் செங்குவளை கருங்குவளை வெண்குவளை என்றெல்லாம் பல வகைகள் உண்டு.
குவளைமலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும்.
குவளை - மணமுள்ள மலர்
ஆம்பல் - மணமில்லா மலர்
இரண்டும் குளத்தில் பூக்கும்


வண்டுகள் மொய்த்தல்
 
898.
நதியினும் குளத்தும் பூவா
   நளினங்கள் குவளையோடு
மதி நுதல் வல்லி பூப்ப.
   நோக்கிய மழலைத் தும்பி
அதிசயம் எய்தி. புக்கு
   வீழ்ந்தன; அலைக்கப் போகா-
புதியன கண்ட போழ்து
   விடுவரோ புதுமை பார்ப்பார்?
 
மதி     நுதல் வல்லி - பிறை போன்ற நெற்றிகொண்ட பெண்கள்
என்னும்  கொடிகள்  (ஒவ்வொன்றும்);  நதியினும்  குளத்தும் பூவா -
ஆறுகளிலும் குளங்களிலும் பூக்க இயலாத; குவளையோடு நளினங்கள்-   (இரு)  குவளை   மலர்களோடு   கூடிய  தாமரை  மலர்  ஒன்றை
(த்தம்மிடத்தில்);    பூப்ப    நோக்கி    -    பூத்திருப்பதைக்கண்டு;
மழலைத்தும்பி   
-   இன்னொலி   மிழற்றும்  வண்டுகள்;  அதிசயம்
எய்திப்புக்கு வீழ்த்தன 
-  ஒரு கொடியில் வேறொரு பூவும். அப்பூவில்
வேறு  இன்னோர்  இனமலர்களும்  பூத்திருக்கும்  அதிசயத்தைக்கண்டு.
அவற்றின்   மேல்   வீழ்ந்து   மொய்த்தன;  அலைக்கப்  போகா  -
(கைகளினால்)   ஓட்டவும்   (அவை)   போகவில்லை.  (?ஏனெனில்)  ;
புதுமை  பார்ப்பார்  
- புதுமை  நாட்டமுடையோர்;  புதியன  கண்ட
போழ்து  விடுவரோ?  
- புதுமைப் பொருள்களைக் காண நேர்கையில்
(எளிதில்) விட்டுவிடுவார்களோ? (விடார் என்க). 
கொடியனையர்   பெண்கள் - அக்கொடிகளில் தாமரை பூத்திருப்பது
போன்றவை  அவர்கள்  முகங்கள்.  அந்தத்  தாமரையில்  குவளைகள்
பூத்திருப்பது   போன்றவை   அவர்கள்   விழிகள்.   ஒரு   கொடியில்
இருவகை மலர்கள் பூப்பது  புதுமையாதலால்.  வண்டினங்கள்  ஓட்டவும்
போகாது.   பெண்டிர்    முகத்தை   மொய்த்த   வண்ணம்  இருந்தன.
அன்றன்று  பூத்த புதுமலர்களை  நாடுவது  வண்டுகளின் இயல்பாதலால்
அவற்றைப்   “புதுமை  பார்ப்பார்”   எனல்   பொருந்தும்.  இயல்பான
நதியிலும் குளத்திலும் இவ்வதிசய  மலர்கள்  பூவா  என்பார். “நதியினும்
குளத்தும்  பூவா”  என்றார்.   நிலத்துக்   கொடிகள்  நீர்ப்  பூக்களைப்
பூப்பதும்.    தாமரைகள்    குவளைப்    பூக்களைப்    பூத்திருப்பதும்
வியப்பின்மேல்  வியப்பாயின.   “வாவி   விரி  தாமரையின் மாமலரில்
வாசக்  காவிரி  நாண்மலர்   முகிழ்த்தனைய   கண்ணார்”. (கம்ப. 1849)
என்பார்  வேறிடத்தும்.  வேற்றுப்பொருள்  வைப்பணி.  கவிஞர்க்குள்ள
புதுமை நாட்டத்தை வண்டின் மேல் வைத்து வெளிப்படுத்தியவாறு.    

Wednesday, August 1, 2018

ஆச்சா மரம்(Hardwickia Binata)

தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்!

ருத்துவப் பயன்பாடு மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படக்கூடிய ஆயிரக்கணக்கான மரவகைகள் காடுகளில் உள்ளன. அவற்றில் பலவற்றை நாம் உபயோகப்படுத்துவதே இல்லை. அப்படி ஒரு வகை மரம்தான் ‘ஆச்சா’ மரம். இதன் ஆங்கிலப் பெயர் ‘ஹார்டுவிக்கியா பினாட்டா’ (Hardwickia Binata). இம்மரத்தை நம்மில் பலர் இன்னமும் அறியாமல் இருக்கக்கூடும். இது மிகவும் வலிமையான மரம். இந்த ஆச்சா மரத்தில்தான் நாதஸ்வரம் செய்யப்படுகிறது. இம்மரத்தைப்பற்றி ராமாயணத்தில்... வாலி வதையின்போது, வாலி தனது உயிரை ஏழு மறா மரங்களில் ஒழித்து வைத்திருந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த மறா மரம்தான் ஆச்சா.

இந்த மரத்தின் வைரப்பகுதி கறுஞ்சிவப்பு நிறத்திலிருக்கும்.
இது தேக்கு மரத்தை விடவும் கடினமானது. இதன் அடர்த்தி மிகவும் அதிகம். நீரில் போட்டால் பாறையைப்போல மூழ்கிவிடும். ஒரு கன மீட்டர் மரத்தின் எடை சுமார் 1,150 கிலோ அளவில் இருக்கும். இவ்வளவு வலிமையாக இருப்பதால், தச்சர்கள் இம்மரத்தை உளி கொண்டு செதுக்குவது கடினம். இப்படிக் கடினமாக இருப்பதால், இதை யாரும் பயன்பாட்டுக்குச் சிபாரிசு செய்வதில்லை. இந்த மரத்தை ‘வேலைக்கு ஆகாது’ என்று ஒதுக்கி விடுகிறார்கள்.


‘எங்க நிலத்துல என்ன போட்டாலும் வரமாட்டேங்குது. மழையில்ல, தண்ணியில்ல, நிலம் பாறையா இருக்கு, மண் செம்புரையா இருக்கு’ என வருத்தப்படும் விவசாயிகளுக்கு, இயற்கை அளித்துள்ள அருள்கொடைதான் ஆச்சா மரம்.  செம்மண், கரிசல்மண்... என அனைத்து வகையான மண்ணிலும் வளரும் அற்புதமான மரம் இது. மேலும், இம்மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக இருப்பதால், விவசாயிகளுக்கு உதவக்கூடிய மரமாகவும் இருக்கிறது. ஆனால், இது குறித்த விழிப்பு உணர்வு நம்மிடையே இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

கிராமங்களில் உள்ள புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றில் ஆச்சா, சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரங்களை நெருக்கமாக நடவு செய்து... இவற்றின் இலைகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுத்துப் பயனடையலாம். இதனால், கால்நடைகளுக்குச் சரிவிகித உணவு கிடைப்பதுடன், தீவனத்துக்கான செலவும் குறையும். புன்செய் நிலங்கள், கற்கள், பாறைகள் நிறைந்த நிலங்களில் வெள்வேல், குடைவேல் மரங்கள் நன்கு வளரும். இதனுடன் ஆச்சா மரங்களையும் நடவு செய்து வளர்க்கலாம். வெள்வேல், குடைவேல் மரங்களின் நெற்றுகள் மற்றும் ஆச்சா மரத்தின் இலைகளை உண்ணும் கால்நடைகளின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், பாலின் அளவும் தரமும் அதிகரிக்கும். பால் பண்ணை வைத்திருப்பவர்கள், தங்கள் நிலத்தின் வரப்போரங்களில் ஆச்சா மரங்களை வளர்க்கலாம்.

இது அற்புதமாக வளரும் மரம். வறண்ட சூழ்நிலையிலும் சிறப்பாக வளரும் தன்மையுடையது. இதன் இலை வளர்ச்சியைவிட,மரத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களான கருவேல், வாகை, வேம்பு, புங்கன் போன்றவற்றோடு ஆச்சா மரத்தையும் நடவுசெய்து ஆய்வு செய்தார்கள். சோதனை அடிப்படையில் இம்மரங்களைப் பத்து ஆண்டுகள் வரை வளர்த்துப் பார்த்ததில்... மற்ற வகை மரங்களைவிட ஆச்சா மரத்தின் வளர்ச்சி அதிகளவில் இருந்தது தெரியவந்திருக்கிறது. இதன்மூலம் வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களில் சிறந்த மரம் ஆச்சா என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மரப்பட்டையிலிருந்து உறிக்கப்படும் நாரை, பதப்படுத்தாமலேயே பயன்படுத்த முடியும். இம்மரக் கட்டைகளைப் பயன்படுத்திக் காகிதம் தயாரிக்க முடியும். இம்மரத்தை நேரடி விதைப்பு, நாற்று நடவு ஆகிய முறைகளில் வளர்க்கலாம் என்றாலும்... நேரடி விதைப்புதான் சிறந்தது. இதன் நெற்றுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்து நடவு செய்யக் கூடாது. உடனடியாக விதை நேர்த்திசெய்து விதைத்துவிட வேண்டும். வரவிருப்பது மழைக்காலம் என்பதால், அதிகளவில் ஆச்சா மரங்களை நடவு செய்தால், எதிர்காலத்தில் நல்ல பயன் கிடைக்கும். 

மழை மறைவுப் பிரதேசங்களுக்கு ஏற்ற மரம் 

ச்சா மரம், நீர் தேங்காத அனைத்து இடங்களிலும் வளரும் தன்மையுடையது. மேலும் பாறை இடுக்குகள், இறுகிய மண் வகைகள் ஆகியவற்றிலும் வளரக்கூடியது. திருச்சி மாவட்டத்தில் எம்.ஆர்.பாளையம், பாடலூர் ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பாக நடவு செய்யப்பட்ட ஆச்சா மரங்கள், தற்போது நன்றாக வளர்ந்து நிற்கின்றன. 300 மில்லிமீட்டர் வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழிப்பாகவும், 600 மில்லி மீட்டர் வரை மழையளவு உள்ள இடங்களில் மிகவும் செழிப்பாகவும் ஆச்சா மரம் வளரும். மழை மறைவுப் பிரதேசங்களுக்கும் ஆச்சா ஏற்ற மரம். 

இதன் கன்றை நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை, வேர் வளர்ச்சி இருக்கும். வேர் வளரும் காலங்களில் செடியின் வளர்ச்சிக் குறைவாகத்தான் இருக்கும். நான்காம் ஆண்டிலிருந்து மரத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் உதிர்ந்திருந்தாலும், தண்டின் வளர்ச்சிச் சிறப்பாக இருக்கும். 

பத்து அடி இடைவெளியில் ஆச்சா கன்றுகளை நடவு செய்தால், சர்வ சாதாரணமாக 70 அடி முதல் 80 அடி உயரம் வரை வளரும். இது நீண்ட நாள்கள் வளரக்கூடிய மரம். இசைக் கருவிகள், ரயில் தண்டவாளங்களில் பதிக்கப்படும் கட்டைகள், சுரங்கங்களின் தூண்கள், உத்திரங்கள், கடைசல்கள், பொம்மைகள் ஆகியவற்றைத் தயாரிக்க ஆச்சா மரக்கட்டைகள் பயன்படுகின்றன. 

https://www.vikatan.com/pasumaivikatan/2017-oct-10/column/134663-trees-series-uses-of-trees.html